Wel Come

Sunday, April 26, 2009

கவிப்பேரரசு வைரமுத்து - காதலித்துப் பார்!

உன்னைச் சுற்றி ஒளிவட்டம் தோன்றும்...
உலகம் அர்த்தப்படும்...
ராத்திரியின் நீளம் விளங்கும்....
உனக்கும் கவிதை வரும்...
கையெழுத்து அழகாகும்.....
தபால்காரன் தெய்வமாவான்...

உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்...
கண்ணிரண்டும் ஒளிகொள்ளும்...
காதலித்துப்பார் !

தலையணை நனைப்பாய்
மூன்று முறை பல்துலக்குவாய்...
காத்திருந்தால் நிமிஷங்கள் வருஷமென்பாய்...
வந்துவிட்டால் வருஷங்கள் நிமிஷமென்பாய்...
காக்கைகூட உன்னை கவனிக்காது
ஆனால்...
இந்த உலகமே உன்னை கவனிப்பதாய்
உணர்வாய்...
வயிற்றுக்கும் தொண்டைக்கமாய்
உருவமில்லா உருண்டையொன்று
உருளக் காண்பாய்...
இந்த வானம் இந்த அந்தி
இந்த பூமி இந்த பூக்கள் எல்லாம்
காதலை கவுரவிக்கும் ஏற்பாடுகள்
என்பாய்
காதலித்துப் பார்!

இருதயம் அடிக்கடி
இடம் மாறித் துடிக்கும்...
நிசப்த அலைவரிசைகளில்
உனது குரல் மட்டும் ஒலிபரப்பாகும்...
உன் நரம்பே நாணேற்றி
உனக்குள்ளே அம்புவிடும்...
காதலின் திரைச்சீலையைக்
காமம் கிழிக்கும்...
ஹார்மோன்கள் நைல் நதியாய்ப் பெருக்கெடுக்கும்
உதடுகள் மட்டும் சகாராவாகும்...
தாகங்கள் சமுத்திரமாகும்...
பிறகு
கண்ணீர்த் துளிக்குள் சமுத்திரம் அடங்கும்...
காதலித்துப் பார்!

சின்ன சின்ன பரிசுகளில் சிலிர்க்க முடியுமே...
அதற்காகவேனும் புலன்களை வருத்திப் புதுப்பிக்க முடியுமே...
அதற்காகவேனும்...
ஆண் என்ற சொல்லுக்கும் பெண் என்ற சொல்லுக்கும்
அகராதியில் ஏறாத அர்த்தம் விளங்குமே..
அதற்காகவேனும்...
வாழ்ந்துகொண்டே சாகவும் முடியுமே
செத்துக் கொண்டே வாழவும் முடியுமே...
அதற்காக வேணும்...
காதலித்துப் பார்!

திரை கவிஞர்களின் காதல் கவிதைகள்.

பறக்கத் தெரியும் திசை தெரியாது
காதல் ஓர்
இலவம் பஞ்சு.

***

என்னைத் தவிர
யாரிடமும் பேசாதே.
உன் இதழ்களில் நனைந்து
வருவதால்
வார்த்தைகளெல்லாம்
முத்தங்களாகிவிடுகின்றன.

***

ஒரு பாதி கதவு நீ
மறு பாதி கதவு நான்
பார்த்துக்கொண்டே
பிரிந்திருக்கிறோம்
சேர்த்து வைக்க
காத்திருக்கிறோம்!

***

காதல் கவிதை
எழுதுகிறவர்கள்
கவிதை மட்டும்
எழுதிக்
கொண்டிருக்கிறார்கள்
அதை வாங்கிச் செல்லும்
பாக்கியசாலிகளே
காதலிக்கிறார்கள்!

***

கொலுசு
உன் கால்களோடு
போய்விட்டது!
சத்தம் மட்டும்
என் காதுகளோடே
வருகிறது!

***

பேச முடிவதே
கொஞ்ச நேரம்தான்!
வெட்கத்தை வீட்டிலேயே
வைத்துவிட்டு
வரக்கூடாதா?

***

சின்ன வயசில் நிறைய
சிலேட்டு குச்சிகளை
முழுங்குவேனாம்!
இருபது வயதுகளில்
இப்படியெல்லாம்
உன்னைப் பற்றி
எழுதத் தானோ?

***

இரவில் ஒளிவிடும்
உன் உடலைப்
பார்க்கும் வரை
தெரியாது எனக்கு
மின்மினிகள்
மின்னுவது
காதலால்தான்
என்பது.

***

இரவும் இரவும் சந்திக்கும்
இரகசியமான இடம்
உன் கூந்தல்.
அதைவிட இரகசியமான
இடம்
உன் இதயம்.
அதனால்தான் அங்கே
என்னை நீ
என்ன செய்கிறாய்
என்றே
தெரியவில்லை.

***

உனக்கும் எனக்கும்
பிடித்த பாடல்
தேநீர்க் கடையில்
பாடிக் கொண்டிருக்கிறது
கடைசி பேருந்தையும்
விட்டு விட்டு
கேட்டுக்
கொண்டிருக்கிறது
காதல்!

About Me

My photo
பெரிதாக சொல்வதிற்கு இல்ல..